திருமண நிகழ்ச்சியில் மின்னல் தாக்கம்- 17 பேர் பலி!

வங்கதேசத்தில், மின்னல் தாக்கியதில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில், தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு மாவட்டமான சபைனாவாப்கஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள ஷிப்கன்ஜ் என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அங்கிருந்த பத்மா ஆற்றங்கரை ஓரத்தில் நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு தரப்பினர் படகில் சென்றனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது உடல் நிலை கவலைக்கிடமாஉள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

(நன்றி Tamil samayam)