தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயார் – பிரதமர் அறிவிப்பு!

தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால், தலிபான்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதை அடுத்து அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துச் செல்கின்றன.

ஆப்கானிஸ்தானில், தலிபான் தலைமையிலான அரசை, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஆப்கன் விவகாரம் குறித்து, லண்டனில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆப்கன் பிரச்னைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் அடைய மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1,615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள். 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி Tamil samayam)