பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றாமல் இருப்பதை உறுதி செய்க – ஜோ பைடனிடம் கோரிக்கை

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அந்நாட்டில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். தலீபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படைகள் வரும் 31-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால் உலக நாடுகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளன. அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல், அந்நாட்டில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தலீபான்கள் பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்க்கப்படுகிறது. அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை சீர்குலைத்து இம்ரான்கான் ஆட்சியை கவிழ்க்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றும் மிகவும் ஆபத்தான நிலை உருவாகலாம்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலீபான்கள் பாகிஸ்தானை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பைடனிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

(நன்றி Dailythanthi)