ஆக்கஸ்: பிரான்சின் ‘முதுகில் குத்திய’ அமெரிக்கா; ‘தீவிர நெருக்கடி’ தொடங்கியது

ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பொய் கூறி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தங்களது தூதர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பிரான்ஸ், “தீவிரமான நெருக்கடி” உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் செயல் “இரட்டை நிலைப்பாடு, நம்பிக்கைத் துரோகம்” என பிரான்ஸ்சின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யூஸ் லே ட்ரியன் பேட்டி ஒன்றில் காட்டமாகப் பேசினார்.

நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக தூதர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இந்த உடன்பாடு குறித்துப் பொய் கூயிருப்பதாகவும் ட்ரியன் கூறியுள்ளார்.

ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கின்றன.

இந்த உடன்பாடு சீனாவுக்கு எதிரானது அல்ல என்று இந்த நாடுகள் கூறினாலும், பாதுகாப்பு நிபுணர்கள் மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறது. ஆக்கஸ் உடன்பாடு கையெழுத்தானதால், பிரான்ஸ் நாட்டுடனான உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆக்கஸ் உடன்பாடு பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் அது பற்றி பிரான்சிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பிரான்ஸை கொதிப்படையச் செய்திருக்கிறது.

“அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் முதன்முறையாக எங்கள் தூதரை திரும்ப அழைக்கிறோம் என்பது ஒரு தீவிரமான அரசியல் நடவடிக்கை. இது இப்போது இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் நெருக்கடியின் தீவிரத்தைக் காட்டுகிறது” என்று லே ட்ரியன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர்கள் திரும்ப அழைக்கப்படுகிறார்.

ஆனால் பிரிட்டன் தனது தூதரை திரும்ப அழைப்பதற்கு “தேவையில்லை” என்று லே ட்ரியன் கூறியுள்ளார். “ஏனெனில் அது ‘தொடர்ச்சியான சந்தர்ப்பவாத’ நாடு” என்று அவர் குற்றம்சாட்டினார்.

“இந்த முழு விஷயத்திலும் பிரிட்டன் மூன்றாவது சக்கரம் போன்றது” என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த உடன்பாடு பிரிட்டனின் நலன்களைப் பாதுகாப்பதற்கவே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தி சண்டே டெலிகிராப் இதழின் கட்டுரையில் தெரிவித்துள்ளார். தனது நலன்களைப் பாதுகாப்பதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கஸ் உடன்பாட்டில் கூறப்பட்டிருப்பது என்ன?

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த ஆக்கஸ் உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மிக உடன்பாடு இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி நீர்மூழ்கியைப் பெறும் ஏழாவது நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. “சற்றும் பொறுப்பில்லாதது” என்றும், “குறுகிய மனப்பாங்கு” கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

“பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்” சீனா அண்மையில் கூறியிருந்தது. “இது காலாவதியான பனிப்போர் மனநிலை” என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

“ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது” என்று “குளோபல் டைம்ஸ்” செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.

சீனாவை எதிர்க்க ஆஸ்திரேலியா தேர்வு செய்யப்பட்டது ஏன்?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்களின் மனித உரிமை குறித்து ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதித்தது. கொரோனா வைரஸின் மூலம் எது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும்பிளவு ஏற்பட்டது.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

இப்படியொரு சூழலில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பகையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

(நன்றி BBC TAMIL)