செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறிய பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.

தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

(நன்றி BBC TAMIL)