கடும் பொருளாதார நெருக்கடி! – ஜனாதிபதி இன்று விசேட உரை

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இதன்படி, இன்று இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட உரை தமிழன் இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

நாட்டிலுள்ள தற்போதைய உண்மை நிலைமையை ஜனாதிபதி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இது குறித்து நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக டொலர் நெருக்கடியின் காரணமாக நாட்டின் சகல துறைகளும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டமையினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறு மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளால் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையினை நிகழ்த்தவுள்ளார்.

 

 

Tamilwin