பெரு நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் – ஊரடங்கு அமல்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை பல்வேறு நாடுகளில் உயர்ந்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.

இதற்கிடையே, பெரு நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், பொட்டாஷ், அம்மோனியா, யூரியா உள்ளிட்ட விவசாய உரங்களின் விலையும் உயர்ந்ததால் விவசாயிகளும் பாதிப்பு அடைந்துள்ளனர். ரஷியாவிடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்துவந்த நிலையில், ரஷியா – உக்ரைன் போரால் இறக்குமதி தடைபட்டு விலை அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 4 பேர் பலியாகினர். பல இடங்களில் சுங்கச்சாவடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 

Malaimalar