ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.

இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

1971-ம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக இருந்து வந்தார். இவரது மறைவுக்குப் பிறகு ஷேக் கலீஃபா இரண்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948-ம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபி அரசாங்கத்தின் ஆட்சியாளராகவும் இருந்தார்.

இவரது ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.

 

 

Malaimalar