பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பாட்டா டால் பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்த சல்ஜீத் சிங் (42), ரஞ்ஜீத் சிங் (38) என்பது தெரியவந்தது.

கொலை நடந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பெஷாவரில் 15000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த தொழில் செய்கின்றனர். சிலர் மருந்துக்கடைகள் வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கைபர் பாக்துன்க்வா மாகாண முதல்வர் மஹ்மூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Malaimalar