இலங்கைக்கு பயங்கரவாதிகளின் நாடு எனப் பெயரிட வேண்டும் – அஜந்த பெரேரா

இந்த நாட்டின் பெயரை மாற்றி பயங்கரவாதிகளின் நாடு எனப் பெயரிட வேண்டும் என கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து நேற்று இலங்கை காவல்துறை தலைமையகத்திற்கு சென்று போராட்டக்காரர்களினால் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

” இது மிகவும் துயரமான நேரம். ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை விடுதலை செய்துக்கொள்ள நாட்டின் பிள்ளைகள் போராட்டத்தை நடத்தினர். அந்த சுதந்திரம் எமக்கு கிடைத்தது.

இதுவா ஆட்சியாளரின் வேலை

ராஜபக்ச குடும்பத்தின் மூன்று பேர் வெளியேறும் வகையில் போராட்டம் நடத்திய பிள்ளைகளும், நாட்டுமக்களும் திறமையை காட்டினர். தற்போதைய அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் தற்போது நடக்கும் விடயங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய மாட்டோம்.

அதிபராக தெரிவானதும், எமது பிள்ளைகளை தாக்கி, தகவல் தொடர்பு நிலையத்தை உடைத்து, போராட்டகளத்திற்கு பெரும் சேதத்தை விளைத்ததை காணக்கூடியதாக இருந்தது. பிள்ளைகள், பிக்குமார், வாய் பேச முடியாதவர்களை தாக்கினர். படையினரை தாக்கினர். இதுவா ஆட்சியாளரின் வேலை.

காலிமுகத்திடல் கரைக்கு சடலங்கள் மிதந்து வருகின்றன. கைகள் கட்டப்பட்ட, கடலில் போடப்பட்ட பிள்ளைகளின் உடல்கள் மிதந்து வருகின்றன. என்ன நடக்கின்றது என்று கேட்பதற்காக பெற்றோர் ஓடி வருகின்றனர்.

பாதுகாப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை

பாதுகாப்பு தொடர்பாக எமக்கு பெரிய பிரச்சினை இருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தில் எமக்கு பேச்சுரிமை, போராடும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் உரிமை அரசியலலமைப்புச் சட்டத்தின் வழங்கப்பட்டுள்ளது. ஏன் அந்த உரிமைகளை அதிபரும், பிரதமரும், அமைச்சர்களும் திருடுகின்றனர்.

இதனை நாங்கள் விரும்பவில்லை. நாட்டிற்கு பயனுள்ளவர்களாக வருவதை காணவே நாங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தோம். எமது பிள்ளைகள் சித்திரவதைக்கு உள்ளாவதை காண எவருக்கும் விருப்பமில்லை” என்றார்.

 

 

-ibc