மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிட மாட்டேன்..! ரணில் அறிவிப்பு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலை சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு, இன்று (31) தெரியப்படுத்தியுள்ளார்.

போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.

அடிப்படை உரிமைகள் மனுக்கள்

அந்த தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், நீதியரசர்களான விஜித் மல்லல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, அதிபர் ரணிலின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரால், ரணிலிடம் வினவப்பட்ட போது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திடப் போவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாக மேலதிக சொலி சிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொள்கை ரீதியில் தீர்மானம்

இது குறித்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது தனது தீர்மானத்தை அறிவிக்குமாறு, சட்டமா அதிபரிடம் ரணில் தெரிவித்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நீதியரசர் விஜித் மலல்கொட, மனுக்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பது குறித்து அடுத்த அமர்வில் அறிவிக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை பெப்ரவரி 23ஆம் திகதி மனு மீதான பரிசீலனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

 

 

-tw