இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க அமெரிக்கா தயார் : சமந்தா பவர்

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முற்படுகையில், அமெரிக்கா கடனளிப்பவராகவும் பாரிஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க தயாராக இருப்பதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடன் மறுசீரமைப்பு

“இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீன மக்கள் குடியரசு இந்தச் செயன்முறைக்கு வெளிப்படையாக ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போல கடன் தாங்க முடியாததாக மாறும் போது, ​​இந்த ஒத்துழைப்பு வாழ்க்கை அல்லது இறப்பு, செழிப்பு அல்லது வறுமை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிக்கும்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

20 மில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கையின் கடனை அதிகரிப்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என்பதை வலியுறுத்திய USAID நிர்வாகி, அமெரிக்க-இலங்கை உறவானது, உதவி உறவாக இல்லாமல், கண்டிப்பாக வர்த்தகம் தொடர்பான உறவாக மாறுவதில் ஆர்வம் காட்டுவதால், அமெரிக்கா மானியங்களை வழங்குகிறது என்றார்.

மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதாக சமந்தா பவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

 

 

-tw