கம்போடியாவில் பள்ளியிலிருந்து வீடு திரும்பவிருந்த 14 மாணவர்கள்- படகு கவிழ்ந்து மரணம்

கம்போடியாவின் மீகோங்(Mekong) ஆற்றில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 14 பேர் மாண்டனர். பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்ல பிள்ளைகள் அந்தப் படகில் ஏறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

படகில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்தனர். கண்டல் (Kandal) மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. தேடல் மீட்புப் படையினர் இன்னும் ஒரு மாணவரைத் தேடுவதாகக் கூறப்படுகிறது. மாண்டோர் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள்.

யாரும் உயிர்க்காப்பு உடைகளை அணியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
படகு உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக மாநிலக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

2 மாணவர்களும் படகைச் செலுத்திய இரண்டு பேரும் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்குக் கம்போடியப் பிரதமர் ஹுன் சென் (Hun Sen) இரங்கல் தெரிவித்தார்.

அவர்களது குடும்பங்களுக்கு உதவ அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

-smc