இலங்கையில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

இலங்கையில் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால் சிறைச்சாலைகளில் கொள்ளவை விடவும் இரண்டு மடங்கு கைதிகள் உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு சிறைக்கு சென்றவர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் உள்ளவர்கள் என சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ள கைதிகள்

இதன்படி, 2022ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை விடவும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதிய தரவுகளின்படி, நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளளவை விட இரு மடங்கு கைதிகள்

நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை மாத்திரமே சிறைவைக்க முடியும். எனினும், தற்போது சிறைச்சாலைகளின் அதிகபட்ச கொள்ளளவை விட இரு மடங்கு சிறைக்கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

-ibc