இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம்

போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு அளிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதில் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக இஸ்ரேல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 5 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் காசா முனை மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவதற்கு எகிப்து அரசாங்கம் தனது நாட்டின் மூத்த அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்படி போரை நிறுத்த இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு அளிப்பதாகவும், இதற்கு உதவிய எகிப்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

-dt