இதுவரை 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

இதுவரை குறைந்தபட்சம் 500 உக்ரேனிய குழந்தைகள் ரஷிய போரினால் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய போரில் இதுவரை குறைந்தது 500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 16 மாதங்கள் ஆகின்றன. குறைந்தது 500 உக்ரேனிய குழந்தைகளை ரஷிய ராணுவம் கொன்றுள்ளது.

ரஷிய ஆயுதங்கள் மற்றும் வெறுப்பு, ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷியா உக்ரைனின் மீது படை எடுத்தது முதல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறது.

அவர்களில் பலர் பிரபலமான அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு சாம்பியன்கள். இந்தப் போரை நாம் எதிர்த்து நின்று வெல்ல வேண்டும். உக்ரைனின் முழு பகுதியும், எங்கள் மக்கள் ,எங்கள் குழந்தைகள் அனைவரும் ரஷிய பயங்கரவாதத்திலிருந்து விடுபட வேண்டும். நடந்துகொண்டிருக்கும் போர் காரணமாகவும், சில பகுதிகள் ரஷிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் சரியான எண்ணிக்கையை கூற முடியவில்லை” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

-dt