13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே எனது நோக்கம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன். முக்கியமாக 13 ஆவது திருத்தத்தில் நாம் அமுல்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 1987 இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றும் அது தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இது தொடர்பாக வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடிய போது 13 ஆவது திருத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பினர். எனவே முதலில் வடக்கைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை குறிப்பிட்டால், ஊழல் தடுப்பு சட்டம் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட வரைவு நீதி அமைச்சரினால் இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணையக்குழுவின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதில் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் அடங்கும். இவை தொடர்பிலும் வடக்கிலுள்ள தமிழ் எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 10 வருடங்களில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

அதிகார பகிர்வு பற்றி பேசுவதற்காகவே இந்த மாநாடு கூட்டப்பட்டது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் கலந்தாலோசித்துள்ளோம். இருப்பினும் இது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அதுபற்றி அனைத்து தரப்புக்களுடனும் பேசி தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நாட்டிலுள்ள 09 மாகாண சபையில் 07 மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களிலேயே உள்ளன. 02 மாகாண சபைகள் மட்டுமே சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளன. வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நாம் அதிகளவிலான மாகாண சபைகளை தெற்கிலேயே செயற்படுத்தியுள்ளோம் என்ற அடிப்படையில் அதிக அனுபவங்களும் உள்ளன. எனவே அவற்றை தொடர்ந்தும் நடத்திச் செல்ல வேண்டும் எனில் அவற்றின் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகும்.

1987 இல் கொண்டு வரப்பட்ட மாகாண சபைச் சட்டத்தில் பல்வேறு குறைப்பாடுகள் உள்னன. அவற்றின் நிர்வாக மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பிலான எந்தவொரு சரத்துக்களும் இல்லை. அதில் ஒரு அதிகாரி தொடர்பில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மாகாண அமைச்சர்களின் அதிகாரம் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபை முதலமைச்சர்கள் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமென கோரி அறிக்கையொன்றை சமர்பித்திருந்தனர். அதற்கு ஏழு மாகாண சபைகளினதும் எதிர்கட்சித் தலைவர்களும் ஆதரவை தெரிவித்திருந்தனர். அதற்கமையே மேற்படிச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதோடு, அதற்கு அவசியமான சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தும்.

குறிப்பாக பிரதேச செயலாளரை தெரிவு செய்தல் மற்றும் நீக்குதல் தொடர்பிலான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அதனை அரச சேவை ஆணைக்குழுவிடம் தெரியபடுத்துங்கள்.

அதேபோல் கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழுமையாக பெற்றுக்கொடுத்தல் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் மாகாண கல்விச் சபைகளை உருவாக்குதல், தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பிலான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பெற்றுக்கொடுத்தல், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான சட்டங்களை அமுல்படுத்துதல், விவசாயத்திற்கு அவசியமான அடித்தள சேவைகளை செயற்படுத்துதல் தொடர்பிலான விடயங்களை மாகாண சபைகளின் ஊடாக செய்துகொள்வதற்கு அவசியமான திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அதேபோல் அனைத்து மாகாணங்களுக்குமான சுற்றுலாச் சபைகளையும் நிறுவ வேண்டும். சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலான விடயங்களை, மாகாண சபை மற்றும் மாவட்டச் சபைகளின் ஊடாகவே பல நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.

அதேபோல் தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகமான மூலதனத்தை கொண்டுள்ள வியாபாரங்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனை குறைந்த பட்சம் 250 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக மாற்றிக்கொள்ள அவசியம் இருக்குமாயின் அது தொடர்பிலான திருத்தங்களை பாராளுமன்றத்தில் ஆலோசிக்க இயலுமை உள்ளது. அதேபோல் அனைத்து மாகாணங்களிலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களை மீள ஆரம்பிக்க முடியும்.

மாகாண சபைகளின் கீழ் இருக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அது தொடர்பிலும் ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது. அமுலில் உள்ள பொலிஸ் கட்டளைச் சட்டத்தை கொண்டு ஒன்றையும் செய்ய முடியாது என்ற காரணத்தினால் அதில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய சட்டமொன்றை கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

 

 

-ad