மொராக்கோவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு; 290-க்கும் மேற்பட்டோர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி 296 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.

பூகம்பம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் பூகம்பம் சரியாக வெள்ளி இரவு 11.11 மணிக்கு நடந்துள்ளது.

இது தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு மாரகேஷை சேர்ந்த அப்தெல்ஹக் எல் அம்ரானி அளித்தப் பேட்டியில், “திடீரென கட்டிடம் பயங்கரமாகக் குலுங்கியது. நான் பூகம்பம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொண்டேன். வெளியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிர்ச்சியில் நான் இருந்த கட்டிடத்திலிருந்து வெளியில் ஓடிவந்தேன். நிறைய பேர் என்னைப் போல் ஓடிவந்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைபேசிகள் ஏதும் வேலை செய்யவில்லை. பின்னர் தொலைபேசி பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் நாங்கள் அனைவருமே சாலையிலேயே இருப்பது என உறுதி செய்தோம்” என்றார்.

மாரகேஷில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

-th