இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரமாகும் போர், அதிகரிக்கும் உயிரிழப்புகள் – இருளில் மூழ்கும் காசா

ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.

எரிபொருள் தீர்ந்தன: காசாவில் செயல்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் சில மணி நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், “எரிபொருள் தீர்ந்து போனதால் சில மணிநேரங்களில் மின் உற்பத்தி நிலையம் முழுவதுமாக மூடப்பட்டு மின் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மின் விநியோகம் சில பகுதிகளில் தடைப்பட்டிருப்பதால் காசா மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு: காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNRWA இந்த இறப்பு குறித்து எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனான் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலின் வடக்கு பகுதியை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு குறிவைத்து தாக்கிவரும் நிலையில், எதிர்த் தாக்குதல் நடந்து வருகிறது. மேலும், லெபனானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.

-ht