இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு  இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி உதித இகலஹேவா இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நீதிமன்ற திகதி வரை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி என் சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் இடைக்கால குழு மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் அதிபர் சட்டத்தரணி உதித இகலஹேவா ஆஜராகி, மனுதாரர் நீதிமன்றத்திற்கு உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு கோரி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்ததையடுத்து, அந்த கடிதங்களை பிரேரணை மூலம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளமை அவர் தவறாக வழிநடத்தியதையே காட்டுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான அதிபரின் சட்டத்தரணி, இந்த உண்மையை மாத்திரம் பரிசீலிக்குமாறும், ஏனைய உண்மைகளை கருத்திற்கொள்ளாமல் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் நீதிமன்றில் கோரினார்.

அதன் பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அதிபர் சட்டத்தரணி மிலிந்த் குணதிலக்க, நீதிமன்றில் உண்மையான உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஒருதலைப்பட்சமாக இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இடைக்காலக் குழு உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் , மேற்படி பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணிகளின் உண்மைகளுடன் தாம் உடன்படுவதாக தெரிவித்தார்.

 

 

-tw