ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி ஏன் ஜெய்ஷங்கரிடம் கேட்கவில்லை?

இராகவன் கருப்பையா – அலுவல் நிமித்தமாக மலேசியாவுக்கு கடந்த வாரம் குறுகிய கால வருகையொன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் 2 நாள்களுக்கு மட்டுமே நம் நாட்டில் தங்கியிருந்தார்.

இருந்த போதிலும் இங்குள்ள நம் சமூகத்தினர் அவரை சந்திப்பதற்கு கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இந்திய தூதரகம்  செய்திருந்த ஏற்பாடு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

ஏறத்தாழ 2 மணி நேரம் மட்டுமே நீடித்த அந்நிகழ்வில் சிலருக்கு மட்டுமே ஜெய்ஷங்கரிடம் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில் பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் இராமசாமியும் சட்டத்துறை துணையமைச்சர் குலசேகரனும் அடங்குவர்.

இவ்விருவர் உள்பட அங்கிருந்த  யாருமே, “ஏன் ஸாக்கிர் நாய்க்கை இங்கிருந்து உங்கள் நாட்டுக்கு மீட்டுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்” என்று ஜெய்ஷங்கரிடம் கேட்டதாகத்  தெரியவில்லை.

அந்த சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளியைப் பார்க்கும் போது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்படி ஒரு கேள்வியை அங்கிருந்த எவருமே ஜெய்ஷங்கரிடம் முன் வைக்கவில்லை என்றே தெரிகிறது.

இதில் அரச தந்திரம் ஏதும் இருந்ததா அல்லது எதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தனவா அல்லது ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி பேசக் கூடாது எனும் கட்டுப்பாடுகள் இருந்ததா தெரியவில்லை.

எது எப்படியோ அங்கிருந்தவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டனர் என்பது மட்டும் தெரிகிறது. அப்படி ஒரு கேள்வியை ஜெய்ஷங்கரிடம் முன்வைத்திருந்தால் ஸாக்கிர் நாய்க் மீதான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.