பவானிக்கு கிடைத்த வாக்குகள் மடானிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இராகவன் கருப்பையா – தோல்வியிலும் வெற்றி இதுதான். பேராக் மாநில ஆயர் கூனிங் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சியின் நிலைப்பாடு.

தேசிய கூட்டணி மற்றும் ஒற்றுமை அரசாங்கம், ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு எதிராக மோதிய அக்கட்சியின் வேட்பாளரான பவானிக்குக் கிடைத்த 1106 வாக்குகள் மடானி அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின் போது தேசிய கூட்டணி, பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, மகாதீரின் பெஜுவாங், ஆகிய 4 பெரும் சக்திகளுக்கு எதிராக பி.எஸ்.எம். தனித்தே நின்று போராடியது.

தேசிய கூட்டணியில் பாஸ் கட்சியும் பெர்சத்துவும் அங்கம் வகிக்கும் வேளையில் பக்காத்தான் கூட்டணியிலும் தேசிய முன்னணியிலும் எண்ணற்ற கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பி.எஸ்.எம். கட்சி எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. இருந்த போதிலும் அக்கட்சியை பிரதிநிதித்துப் போட்டியிட்ட அதன் தேசிய துணைப் பொதுச் செயலாளரான பவானிக்கு அப்போது 586 வாக்குகள் கிடைத்தன. அந்த எண்ணிக்கை மொத்த வாக்குப் பதிவில் 3 விழுக்காடாகும்.

கடந்த முறை பதிவு செய்யப்பட்ட 75 விழுக்காடு வாக்காளர்களோடு ஒப்பிடுகையில் இந்த தடவை அத்தொகுதியின் மொத்த வாக்குப் பதிவு வெறும் 58 விழுக்காடுதான். ஆனால் அவர்களில் 6 விழுக்காட்டினர் பவானிக்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுக்காட்டிலும் எண்ணிக்கையிலும் அவருக்குக் கிடைத்துள்ள ஏறத்தாழ இரு மடங்கு கூடுதலான வாக்குகள் பி.எஸ்.எம். கட்சியின் எழுச்சியைத்தான் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

மூன்றாவது அணியின் உருவாக்கம் வெகுதூரமில்லை என்பது மட்டுமின்றி அன்வாரின் அரசாங்கத்திற்கு எதிரான இந்தியர்களின் உணர்வுகளையும் ஒருசேர இது பிரதிபலிக்கிறது என்பதில் ஐயமில்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா.வை வைத்து இந்தியர்களின் ஆதரவை மீட்டுவிடலாம் என அரசாங்கம் எண்ணினால் அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அது, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும்.

பிரதமர் அன்வார் சுயமாகக் களமிறங்கி இந்தியர்களின் ஆதங்கத்திற்கு செவிசாய்க்க வேண்டியத் தருணம் வந்துவிட்டது. இல்லையேல் அவருக்கான நம் சமூகத்தின் மீதமுள்ள ஆதரவும் மேலும் சரிவதைத்தான் அவர் காண்பார்.

இம்முறை கூட ஆட்டுக்கறி போட்டு வாக்கு வேட்டையாட எத்தனித்தக் கூட்டம் சற்று ஏமாந்துதான் போனது என்று சொல்லப்படுகிறது. மிகச் சிலரே அந்த வலைக்குள் சிக்கினர் என்றும், பொரும்பாலோர் தங்களுடைய தன்மானத்தைத் தற்காத்து, ஆட்டுக்கறிக்கு சோரம் போகவில்லை என்று தெரிகிறது.

அண்மைய காலமாக நாடளாவிய நிலையில் நம் சமூகத்திற்கு எதிராக பிற இனத்தவரால் காட்டப்படும் காழ்ப்புணர்ச்சியின் விளைவாக நிறைய பேர் தெளிவடைந்துவிட்டதால் இனிமேலும் வெற்று வாக்குறுதிகளையும் ஆட்டிறைச்சியையும் தூண்டிலாகப் போட்டு வாக்கு வேட்டையாட முடியாது.

இதற்கிடையே கடந்த காலங்களில் பக்காத்தானுக்கு எதிராக பாரிசான் பயன்படுத்திய அதிகார யுக்திகளை இத்தேர்தலில் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளைப் போல,’ அவ்விரு அணிகளும் கூட்டாகச் சேர்ந்து எதிரணிகளை வீழ்த்துவதற்கு பயன்படுத்தியுள்ளன.

ஆளும் கூட்டணி எனும் வகையில் அரசாங்க வசதிகளை பயன்படுத்தியது, அத்தொகுதிக்கு புதிய திட்டங்களை அறிவிப்பு செய்தது போன்றவை எல்லாம் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்களாகும்.

பல இடங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதற்கு பி.எஸ்.எம். கட்சிக்கு கடைசி நேரத்தில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழுத்தங்களுக்கு திரைமறைவில் யார் காரணமாக இருந்திருப்பார் என்பதெல்லாம் ‘உள்ளங்கை நெல்லிக் கனி.’

ஒரு சில இடங்களில் கட்சிக் கொடிகள் கூட அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய அடாவடித்தனம் எல்லாம் நமக்கு புதிய விஷயங்கள் இல்லை. ரவுடிகளை வைத்து மிரட்டி காரியம் சாதிப்பது போன்ற காலாடித்தனங்களை நாம் காலங்காலமாக பார்த்து வருகிறோம்.

இத்தகைய எதிர்மறையான சூழல்களையெல்லாம் கடந்து, 6 விழுக்காடு வாக்குகளை பதிவு செய்த பி.எஸ்.எம். அடுத்த பொதுத் தேர்தலில் மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அக்கட்சிக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்பதை இதன்வழி புலப்படுத்தியுள்ளனர்.