இராகவன் கருப்பையா – ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் ராஜகோபால் பொன்னுசாமியின் ‘மாறுவோம் மாற்றுவோம், ஆசிரியம் போற்றுவோம்,’ எனும் நூல் எதிர்வரும் சனிக்கிழமை 31ஆம் தேதி வெளியீடு காணவிருக்கிறது.
பல்லாண்டுகால, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, கல்வித்துறை தொடர்பாக அவர் எழுதியுள்ள இந்நூல் பிற்பகல் 4 மணிக்கு தலைநகர் விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள சோமா அரங்கில் வெளியிடப்படும்.
தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் கூட ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் ராஜகோபால்,
‘எதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விமான்கள் மாறவேண்டும்’ என மொத்தம் 82 தலைப்புகளில் பல அரிய கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கி இருக்கிறார்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி பற்றியும் ஆசிரியர்களின் பொறுப்பு, கடமை மற்றும் ஈடுபாடு பற்றியும் நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.
சிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தாயில் உள்ள ‘ஹோப்ஃபுல்’ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் பட்டதாரியான ராஜகோபால்,
‘ஆசிரியர் பணி சுமையா அல்லது சுகமா,’ என்ற தலைப்பில் தன் கருத்துகளை மிக ஆழமாகவும் உரக்கமாகவும் எழுதியிருக்கிறார்.
“ஆசிரியர்களே மாற்றத்தின் வித்தகர்கள். எனவே சமுதாயத்தில் முன்னோடிகளாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கிட அவர்கள் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்பதை பறைசாற்றும் எண்ணற்றக் கருத்துகளை மிகத் துணிச்சலாக அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் தன்முனைப்போடு விளங்கிட, தமது 37 வருட ஆசிரியர் பணியின் வெற்றி தோல்விகளை விவரித்துள்ளதானது மற்ற ஆசிரியர்களுக்கு பெரும் உந்து சக்தியாகவும் அமையும்.
300கும் மேற்பட்ட கல்வி பயிலரங்குகளை மாணவர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் பொது இளைஞர் அமைப்புகளுக்கும் நடத்தி இருப்பதோடு வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் கல்வியாளர்களுக்கும் பயிலரங்குகள் நடத்தியுள்ள சுவையான அனுபவங்களையும் இந்த புத்தகத்தில் ராஜகோபால் விவரித்துள்ளார்.
தான் பயின்ற ‘ஹோப்ஃபுல்’ தோட்டத் தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி எண்ணற்ற இதர தமிழ்ப்பள்ளிகளுக்கும் தொடர்ந்து நற்சேவையாற்றிவரும் இந்த கல்விமான், ஏற்கெனவே 2 புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ‘என் ஆசிரியர் பணி நினைவலைகள்,’ எனும் நூலையும் சென்ற ஆண்டில், ‘மலேசியாவில் தேர்தல்: ஒரு கண்ணோட்டம்,’ எனும் புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.