சிங்கப்பூரில் மலேசியரின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது, காரணம் தெரியவில்லை – வழக்கறிஞர்

இன்று காலை நடைபெறவிருந்த மலேசிய நாட்டவரான கே. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக வழக்கறிஞரும் ஆர்வலருமான என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்குப் பிறகு சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையால் தொலைபேசி அழைப்புமூலம் தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், இந்த முடிவுக்கான காரணங்கள்குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

“சாங்கி சிறையில் இன்று காலை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்த மலேசிய குடிமகன் தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.”

“நள்ளிரவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினருக்கு சிறையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதுகுறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.”

“இந்த நேரத்தில் எங்களுக்கு வேறு எந்தத் தகவலும் இல்லை. சிறந்த முடிவுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டியின் ஆலோசகராகவும் இருக்கும் சுரேந்திரன் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

39 வயதான தட்சிணமூர்த்தி, 44.96 கிராம் டயமார்ஃபின் நாட்டிற்குள் கடத்தியதற்காக இன்று தூக்கிலிடப்படவிருந்தார்.

2011 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆரம்பத்தில் 2022 ஆம் ஆண்டு தூக்கிலிட திட்டமிடப்பட்டது.

இருப்பினும், தண்டனை தொடர்பாகச் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிரான சட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து மரணதண்டனைக்கு இடைக்காலத் தடையைப் பெற முடிந்தது.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு மலேசியர்களில் இவரும் ஒருவர். இவர்களின் மரண தண்டனையில் புத்ராஜெயா தலையிட வேண்டும் என்று சுகஹாம் இந்த மாத தொடக்கத்தில் விடுத்த வேண்டுகோளின் ஒரு பகுதியாக இது குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற மூன்று நபர்கள் பி. பன்னீர் செல்வம், எஸ். சாமிநாதன் மற்றும் ஆர். லிங்கேஸ்வரன்.