செவிலியர் கொடுப்பனவு குறித்து ஆராய பணிக்குழு அமைக்கப்படும் – சுல்கிப்ளி

செவிலியர்களுக்கான உயர்கல்வி கொடுப்பனவை அதிகரிப்பதற்கான முன்மொழிவை ஆராய விரைவில் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது தெரிவித்தார்.

இந்த முன்மொழிவை சுகாதார அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இது குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் அமைச்சால் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று இங்குள்ள தொங்காங் பெச்சாவ் சுகாதார மையத்திற்கு வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அண்மைய காலத்தில், அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தனது ஆலோசனைகளைத் தொடங்கும்’ என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் கவனமாகப் பரிசீலிக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்யும்.

செவிலியர்கள், மருத்துவர்கள், நிபுணர்கள் அல்லது பிறர் என நமது பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், என்று அவர் தெரிவித்தார்.

செவிலியர் கொடுப்பனவை தற்போதைய 100 வெள்ளியிலிருந்து குறைந்தது 500 வெள்ளியாக உயர்த்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மறுஆய்வு செய்யும் முறையை உருவாக்க வேண்டும் என்றும் மலேசிய மருத்துவ சங்கம் வியாழக்கிழமை அரசாங்கத்தை வலியுறுத்தியது.

கடந்த 17 ஆண்டுகளாக இந்தக் கொடுப்பனவு 100 வெள்ளியாகவே நீடிப்பதாகக் குறிப்பிட்ட மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, இந்தத் தொகை போக்குவரத்துச் செலவுக்குக் கூட போதுமானதாக இல்லை என்று கூறினார்.

தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, டயாலிசிஸ், புற்றுநோயியல் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு போன்ற துறைகளில் செவிலியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதோடு, சுகாதார அமைப்பில் அவர்கள் மிக முக்கியப் பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

-fmt