அதிகாலை சந்தகானில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி கூறுகையில், தீயணைப்புப் பணிகள் நண்பகலில் முடிவடைந்தன என்றும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இன்று காலை சந்தகான், சபாவில் உள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து நாசமாகின.

சந்தகானில் உள்ள கம்போங் பஹாகியா என்ற நீர் கிராமத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்ததாகவும், 9,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தகானில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜிம்மி லாகுங் கூறுகையில், இந்தத் தீ 4 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ளதாகவும், கடல் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தீயை அணைக்கும் பணிகளுக்குத் தேவையான திறந்தவெளி நீர் ஆதாரத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடல் நீருடன், தீயணைப்பு நடவடிக்கைகளில் ஒரு தொழிற்சாலைக்குச் சொந்தமான டேங்கர் லாரி மற்றும் அழுத்தப்பட்ட நீர்க்குழாயில் இருந்தும் நீர் பயன்படுத்தப்பட்டது. தீயை அணைப்பதற்காக, 300 மீட்டர் நீளமுள்ள நான்கு குழாய்களும் 12 நீர் பீய்ச்சிகளும் பயன்படுத்தப்பட்டன.

“கினபடாங்கன் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் (FRT) ஒன்றும் இந்த நடவடிக்கைக்கு உதவியது. அது, 120 மீட்டர் நீளமுள்ள இரண்டு குழாய் இணைப்புகளையும் நான்கு நீர் பீய்ச்சிகளையும் பயன்படுத்தியது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்புப் பணி நண்பகலில் நிறைவடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் ஜிம்மி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் குடியிருப்பிற்கு பாதுகாப்பற்றவை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து நகராட்சி மன்றம் பேரிடர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சந்தக்கான் நகராட்சி மன்றத் தலைவர் வால்டர் கென்சன் தெரிவித்தார்.

காலை 7 மணிக்கு திறக்கப்பட்ட பத்து சாப்பி மக்கள் வீட்டுத் திட்ட (Batu Sapi People’s Housing Project) மண்டபத்திலுள்ள மையத்துடன் கூடுதலாக, காலை 11 மணிக்கு சந்தக்கானில் உள்ள செக்கோலா கெபாங்சான் காஸில் (Sekolah Kebangsaan Gas) இரண்டாவது நிவாரண மையம் திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் விவகாரங்கள் அமைச்சர் முஸ்தபா சக்முத், இந்தச் சம்பவத்தை ஒட்டுமொத்த நாட்டையும் துயரத்தில் ஆழ்த்திய ஒரு நெஞ்சை உலுக்கும் சோகம் என்று விவரித்தார்.

கம்பங் பஹாகியா குடியிருப்பாளர்கள் உணரும் வலியை அனைத்து மலேசியர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று முஸ்தபா கூறினார்.

கற்பனை செய்து பாருங்கள், ஒரே இரவில், தங்குமிடத்தை இழந்த குழந்தைகளும், தங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்த பெற்றோர்களும், உடுத்தியிருந்த ஆடையைத் தவிர வேறு எதுவும் இல்லாத குடும்பங்களும் இருந்தனர்.

“இது வெறும் தீ விபத்து மட்டுமல்ல, கண் இமைக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட 1,000 வீடுகளை அழித்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களைப் பாதித்த ஒரு மனிதாபிமானப் பேரழிவு,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து உதவிகளும் முடிந்தவரை விரைவாக வழங்கப்படுவதையும், மீட்புப் பணிகள் முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படுவதையும் புத்ராஜெயாவும் சபா மாநில அரசும் உறுதி செய்யும் என்று முஸ்தபா கூறினார்.