விசாரணைக்கு உதவி செய்வதற்காக ஒரு பெண் உட்பட மூன்று இலங்கை பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் உள்ள சிலாயாங் மற்றும் டேசா பெட்டாலிங் ஆகிய இரண்டு குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் சிண்டிகேட்டின் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாக குடிவரவு இயக்குநர் ஜெனரல் ஜகாரியா ஷபான் கூறினார்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து, வெளிநாட்டுத் தொழிலாளர் தரவு மற்றும் ஆவணங்களைப் போலியாகத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த மற்றொரு சிண்டிகேட்டை (இரகசிய கும்பல்) குடிவரவுத் துறை முறியடித்துள்ளது.
சிலாங்கூரில் உள்ள சிலாயாங் மற்றும் டேசா பெட்டாலிங் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிண்டிகேட்டின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டதாக குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் சகாரியா ஷாபான் தெரிவித்தார்.
“இந்த சிண்டிகேட் துறையினால் வழங்கப்பட்ட இ-பாஸ் (ePASS) போன்ற அசல் ஆவணங்களை மாற்றியமைத்ததும், அதிகாரிகளை திசைதிருப்ப போலி ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குடிவரவுத் துறை மற்றும் மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தில் (MDEC) விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆதரவாக, திருமணப் பதிவு ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் போன்ற ஆவணங்களையும் இந்த சிண்டிகேட் தயாரித்துள்ளதாக சகாரியா கூறினார்.
“வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் வசதியாக இந்த சிண்டிகேட் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 கடவுச்சீட்டுகள் (passports), 15 ஐ-கார்டுகள் (i-Cards), ஐந்து டிஜிட்டல் சாதனங்கள், ஐந்து கைபேசிகள் மற்றும் ஒரு அச்சுப்பொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்கு உதவும் வகையில் 35 முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று இலங்கை பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63, கடவுச்சீட்டுச் சட்டம் 1966, குடிவரவு விதிமுறைகள் 1963 மற்றும் மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் மேல் விசாரணைக்காக குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
























