உங்கள் பேரக்குழந்தைகளிடம் இருந்து RSV வைரஸ் பரவ வாய்ப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

முதியவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளிடமிருந்து ‘சுவாச ஒத்திசைவு வைரஸ்’ (Respiratory Syncytial Virus – RSV) தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக முதியோர் நல மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். முதியவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த வைரஸ் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

RSV என்பது நெருங்கிய தொடர்பின் மூலம் பரவும் ஒரு பொதுவான வைரஸ் ஆகும். இது பொதுவாகக் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால், முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடும்.

மலாயா பல்கலைக்கழகத்தின் முதியோர் மருத்துவ ஆலோசகரும், பேராசிரியருமான டாக்டர் டான் மாவ் பின் கூறுகையில், இந்த RSV வைரஸ் குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

யாராவது தங்களுக்குப் பேரக்குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னால், அவர்களிடம் பேசுவது மிக எளிது. ‘இந்தத் தொற்று உங்கள் பேரக்குழந்தையிடமிருந்து உங்களுக்குப் பரவலாம் அல்லது அதைவிட மோசமாக, உங்களிடமிருந்து உங்கள் பேரக்குழந்தைக்குப் பரவலாம்’ என்று நீங்கள் அவர்களிடம் கூறலாம்.

இது அவர்களின் எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுகிறது. முதியவர்களுக்கு RSV என்பது சாதாரணமான ஒன்று கிடையாது,” என்று மலேசிய பைசர் (Pfizer) நிறுவனத்தின் ‘முக்கியமான காரணங்களுக்காக’  என்ற பிரச்சாரத் தொடக்க விழாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் கூறினார். உலக நோய்த்தடுப்பு வாரம் 2026-ஐ முன்னிட்டு, பெரியவர்களின் சுவாச ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நான்கு நாடுகளில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிப்பதால், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு கொண்டு செல்லும் என்றார். மேலும், குணமடைந்த பிறகும் முதியவர்களை இது பலவீனமாக்கக்கூடும்; குறிப்பாக ‘சார்கோபீனியா’ எனப்படும் தசை இழப்பை இது ஏற்படுத்துகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அந்தோணி கியூட்டோ லீச்சன் கூறுகையில், நிமோனியா, காய்ச்சல் மற்றும் RSV போன்ற நுரையீரல் தொற்றுகள் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அலட்சியப்படுத்த முடியாது என்றார்.

“நுரையீரலும் இதயமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. சுவாச ஆரோக்கியத்தை நீங்கள் தனிப்பட்ட ஒன்றாகக் கருத முடியாது,” என்று அவர் கூறினார். மேலும், இதயப் பாதிப்பு சீராக இருப்பவர்கள் கூட, கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

டாக்டர் டான் மற்றும் லீச்சன் குறிப்பிட்ட தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கவில்லை என்றாலும், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் இது குறித்து மருத்துவர்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடுவதும், கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியம் என்று தெரிவித்தனர்.

 

 

-fmt