உணவகங்களில் புகைப்பிடித்தல்: சட்ட அமலாக்கம் என்ன ஆனது?

இராகவன் கருப்பையா – உணவகங்களில் புகைப்பிடிக்கக் கூடாது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை முறையாக அமலாக்கம் செய்யாததால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால் அண்மைய மாதங்களாக ஒரு சில உணவகங்களில் வாடிக்கையாளர்களிடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை சற்று மோசமாகி வருகிறது.

ஆகக்கடைசியாக சிலாங்கூர், கோல லங்ஙாட் மாவட்டத்தின் தெலுக் பங்லிமா காராங் பகுதியில் உள்ள ஒரு ‘நாசி கண்டார்’ உணவகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவமானது, இரு கும்பல்களுக்கிடையே அடிதடியில் முடிந்தது.

அச்சம்பவத்தில், உணவகத்திற்குள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த ஒரு நபரை மற்றொரு வாடிக்கையாளர் கண்டிக்க எத்தனித்த போது, இரு கும்பல்களுக்கிடையே அது சண்டையாக மாறி நிலைமை அமளி துமளியானது.

நாடு தழுவிய நிலையில் உள்ள எல்லா உணவகங்களிலும் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் இயற்றியது.

புகைப்பிடிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் உணவக எல்லையிலிருந்து 3 மீட்டர்களுக்கு அப்பால்தான் அவ்வாறு செய்ய முடியும் என அச்சட்டம் வரையருக்கிறது.

வெகுசன மக்களின், குறிப்பாக புகைப்பிடிக்காத வாடிக்கையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை இதன் வழி நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அச்சட்டத்தின் அமலாக்கம் ஏனோ தானோ எனும் நிலைப்பாட்டில் ஆக்ககரமற்றதாகக் கிடப்பதால் தற்பொழுது பிரச்சனைகள் எழுத் தொடங்கிவிட்டன.

“என்னை தடுக்க யாருக்கு தைரியம் இருக்கிறது,” எனும் திமிரில் இன்னும் சிலர் அக்குற்றத்தை புரிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தடுத்து நிறுத்த முயன்றால் பிரச்சனைகள் ஏற்படும் அல்லது வியாபாரம் பாதிக்கும் எனும் அச்சத்தில் உணவக ஊழியர்களும் உரிமையாளர்களும் கண்டும் காணாததைப் போல இருக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் இத்தகைய அராஜகத்தை துணிச்சல் மிக்க இதர வாடிக்கையாளர்கள் கண்டிக்க முற்படும் போதுதான் நிலைமை வரம்பு மீறி கைகலப்பில் முடிகிறது.

சட்டத்தை அமலாக்கம் செய்ய வேண்டிய காவல்துறையினரே சில வேளைகளில் உணவகங்களுக்குள் அமர்ந்து புகைப்பிடிக்கும் காணொளிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

‘வேலியே பயிரை மேய்வதை’ப் போலான இவர்களுடைய செயலை தடுக்கவோ கண்டிக்கவோ யாருக்குதான் துணிச்சல் வரும்?

பல சந்தர்ப்பங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகுதான் அதன் தொடர்பான சட்ட அமலாக்கத்தைக் கடுமையாக்கும் போக்கு நம் அரசாங்கத்திற்கு பழகிப் போன ஒன்றாக உள்ளது.

‘வருமுன் காப்போம்’ எனும் நிலைப்பாட்டுக்கு பல வேளைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

எனவே அரசாங்கம் அதிகமான அமலாக்க அதிகாரிகளை பணியில் அமர்த்தி உணவகங்களில் புகைப்பிடிப்போர் மீது உடனுக்குடன் குற்றப் பதிவு செய்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துவதற்கு வகை செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்களிடையே எற்படும் கைகலப்பு முற்றிப்போய் விபரீதத்தில் முடியும் வரை அரசாங்கம் காத்திருக்கக் கூடாது.