தியோ பெங் ஹொக் விவகாரம்: மலேசியாவுக்கு அவமானம்

இராகவன் கருப்பையா – சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்த அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் இறப்பு தற்போது நம் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது வருத்தமான விஷயமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக நம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் சஞ்சலம் பீடித்த மர்மங்களுக்கும் மரணங்களுக்கும் இன்னமும் தீர்வு காணப்படாமல் இருப்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படிப்பட்ட ஒரு மரண விவகாரத்திற்கு நீதி கோரி, சம்பந்தப்பட்டக் குடும்பத்தினர் ஐக்கிய நாட்டுச் சபை வரையில் சென்றுள்ளது மலேசியாவுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.

முன்னுதாரணம் இல்லாத இந்த தலை குனிவுக்கு அரசாங்கம்தான் முழு பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.

தங்களுடைய குடும்ப உறுப்பினரை மர்மமான முறையில் இழந்து, அதற்கு நீதி கிடைக்காமல் ஆண்டுக் கணக்கில் பரிதவிக்கும் அவர்களுடைய சொல்லொன்னாத் துயரின் ஆழம் அவர்களுக்குத்தான் தெரியும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் பணியாற்றிய தியோவை கடந்த 2009ஆம் ஆண்டில் ஊழல் வழக்கொன்றின் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைத்திருந்தது.

இரவு முழுவதும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட அவர், விடியற்காலையில் 6ஆவது மாடிக்கு வெளியே பிணமாகக் கிடந்தது மிகப் பெரிய மர்மம்.

அது ஒரு தற்கொலை என தொடக்கத்தில் புரளி கிளப்பப்பட்டது. ஆனால் அது விபத்தோ தற்கொலையோ அல்ல என மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறகு தெளிவாகத் தீர்ப்பு வழங்கியது.

அவருடையக் குடும்பத்தினர் பல வகையில் போராடிய போதிலும் அரசாங்கத் தரப்பில் ஒரு அணுவும் நகரவில்லை என்பது சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் ஏமாற்றம்தான்.

இருப்பினும் தியோவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என விடாப்பிடியாகப் போராடிய அவருடையக் குடும்பத்தினர் கடந்த 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத வாக்கில் பிரதமர் அன்வாரை சந்தித்து முறையிட்டனர்.

“இம்முறை யாருடையத் தலையீடும் இல்லாமல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும்,” என அன்வார் உறுதியளித்த போதிலும் அதுவும் வெறும் புஸ்வானமாகவே முடிந்தது.

காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போகுது என பொறுமையிழந்த குடும்பத்தினர் வேறு வழியின்றி நீதி கேட்டு நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாட்டுச் சபையின் தலைமையகத்திற்குச் சென்ற அவர்கள் அச்சபையின் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இத்தகைய விவகாரங்களில் ஏனோ தானோ எனும் அலட்சியப் போக்கை மலேசிய அரசாங்கம் கைவிட வேண்டும். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு,’ என்பதற்கு ஏற்ப, எல்லா உயிர்களும் விலைமதிப்பற்றவைதான் எனும் நிலைப்பாடு வேண்டும்.

இல்லையேல் இதே போல பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களும் தியோ குடும்பத்தினரின் வழிமுறையை பின்பற்றி நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும்.