இந்து மதம் இழிவுபட்டாலும் கண்டனக் குரல் வேண்டும்.

இராகவன் கருப்பையா

நம் நாட்டில் இஸ்லாம் மட்டுமின்றி, எந்த சமயத்தையும் யாரும் இழிவுபடுத்தக் கூடாது எனும் நிலை வந்தால் நாம் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம்.

அண்மையில் ‘குர்ஆனை’ இழிவுபடுத்திய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ள விவகாரம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

பஹாங்ஙில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் அந்த 21 வயது மாணவர் புரிந்தது குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தவறுக்கு ஏற்ற தண்டனையை அவர் கண்டிப்பாக அனுபவிக்கத்தான் வேண்டும். சட்டதிட்டங்கள் மட்டுமின்றி நாட்டின் நிலைமையைப் பற்றியும் அவர் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நாடளாவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அச்சம்பவம் பல்லினங்களையும் சேர்ந்த, எல்லா நிலைகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

சாமானிய மக்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அன்வார் உள்பட எண்ணற்ற அரசியல்வாதிகள் அது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இவர்கள் எல்லாருடைய ஆதங்கமும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருந்தது. அதாவது குற்றம் புரிந்தவர் அதற்கேற்ற தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய ஒருமித்தக் கருத்தாகும். அந்த உணர்வு நியாயமான ஒன்றுதான் என்பதில் ஐயமே இல்லை.

ஆனால் இந்து மதம் இழிவுபடுத்தப்படும் போது இவர்கள் எல்லாருமே ஒன்றும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதுதான், நமக்கு மிகவும் வியப்பாக உள்ளது மட்டுமின்றி ஓரளவு கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

இதே போன்ற ஆர்ப்பரிப்புகளையும் கண்டன அறிக்கைகளையும் ஏன் காண முடியவில்லை என்பது நம் சமூகத்தினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

குறிப்பாக மதம் மாறி, இஸ்லாமிய சமய போதகராக இருக்கும் ஸம்ரி வினோத் காளிமுத்து எனும் ஒரு நபர் கடந்த சில ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் இந்து மதத்தை தரைமட்டத்திற்கு கேவலப்படுத்தி நம்மை சினமூட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

அவ்வப்போது இந்துக்களின் இதயங்களை கீறிக் கொண்டிருக்கும் இந்நபரின் அடாவடித்தனம் பற்றி அன்வார் உள்பட கிட்டதட்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இல்லை.

நாடு தழுவிய நிலையில் அவருக்கு எதிராக ஏறத்தாழ ஆயிரம் புகார்கள் செய்யப்பட்ட போதிலும் அமலாக்கத் தரப்பில் ஒரு அணுவும் நகரவில்லை என்பது நமக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

அந்த நபர் விவகாரத்தில் காலங்காலமாக சட்டம் தனது கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறது. அவருக்கு யார் உடந்தை, ஏன் அவர் மட்டும் சட்டத்திற்கு மேல் இருக்கிறார் என்று தெரியவில்லை.

அவர் மட்டுமின்றி இதர பலரும் கூட அவ்வப்போது இந்து மதத்தை ‘காலில் போட்டு மிதிப்பதைப் போல’ அவமதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

எனினும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு எதிராக புகார் செய்யப்படும் போது, எல்லாமே வெறும் ‘செவிடன் காதில் ஊதிய சங்குதான்.’

எனவே அரசு சமயமாக இருக்கும் இஸ்லாம் மட்டுமின்றி, எந்த அரசமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த சமயமாக இருந்தாலும் அதனை இழிவுபடுத்துவோர் மீது அரசமைப்பு சட்டவிதிகளின் படி சரிசமமாக சட்டம் பாய வேண்டியது அவசியமாகும்.