20 வயதுடைய அந்த இளைஞர், கடந்த சனிக்கிழமை ஹுவா ஹின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புச் சோதனையைத் தவிர்த்து தப்பிச் செல்ல முயன்ற பின்னர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து பாதுகாப்புப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், பெங்காக்கிலிருந்து தெற்கு தாய்லாந்திற்கு போதைப்பொருட்களைக் கடத்திச் செல்வதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை, கிடைத்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழியிலேயே மறித்துச் சோதனையிட்டனர்.
தாய்லாந்து காவல்துறை ஹுவா ஹின்னில் (Hua Hin) கடந்த சனிக்கிழமை 20 வயது மலேசிய இளைஞர் ஒருவரைக் கைது செய்து, ரிம 8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 166 கிலோ கிராம் ‘கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்’ (crystal methamphetamine) போதைப்பொருளைப் பறிமுதல் செய்தது.
பெரிட்டா ஹரியான் தகவலின்படி, அதிக அளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பேங்காக்கிலிருந்து தெற்கு தாய்லாந்திற்கு போதைப்பொருட்களைக் கடத்துவதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை நிற BMW காரை தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் வழிமறித்தனர்.
அதிகாலை 12.30 மணியளவில் அந்த கார் வீதித் தடுப்பைத் தாண்டித் தப்ப முயன்றதாகவும், எனினும் காவல்துறையினர் அதனைப் பின்தொடர்ந்து சென்று, ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நிறுத்தியதாகவும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காரின் உள்ளே பல பயணப்பெட்டிகள் (suitcases) கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அந்தப் பயணப்பெட்டிகள் தன்னுடையவை அல்ல என்றும், அவற்றை திறப்பதற்கான பூட்டு ரகசியக் குறியீடு (combination lock) தனக்குத் தெரியாது என்றும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறையினர் சந்தேக நபரின் சம்மதத்துடன் வாகனம் மற்றும் பயணப்பெட்டிகளைச் சோதனையிட்டதில் 166 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
தெற்கு தாய்லாந்திற்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு ஹுவா ஹின் பகுதியை ஒரு இடைத்தளமாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல் குறித்த விசாரணையைத் தொடர்ந்து இந்தச் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த போதைப்பொருட்கள் ஹுவா ஹின்னில் விநியோகிப்பதற்காகக் கொண்டு வரப்படவில்லை என்றும், அவை ஹாத்யாய் (Hatyai) மற்றும் தெற்கு தாய்லாந்தில் உள்ள மூன்று மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெங்காக்கை தளமாகக் கொண்ட ஒரு சீனப் பிரஜை இந்தச் சரக்கை அனுப்புவதற்கு உத்தரவிட்டு, நியமிக்கப்பட்ட இடங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்குமாறு கூரியர்களைப் (couriers) பணித்ததாகக் கூறப்படுகிறது.
























