அன்னையர் தினக் கட்டுரை:
இராகவன் கருப்பையா தனது தாயை நினைவுக் கூறுகிரார் – ஆர்-
பள்ளிக்கூடம் சென்று அடிப்படைக் கல்வி கூட கற்கவில்லை எனும் போதிலும் தமது பிள்ளைச் செல்வங்கள் எல்லாருமே முறையாகக் கல்விக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என் அன்னை ராஜம்மாவின் தியாக உணர்வை இன்று நான் நினைவுக்கூருகிறேன்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள, செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இலங்குடி எனும் விவசாய கிராமத்தில் கடந்த 1930ஆம் ஆண்டு அம்மா பிறந்தார்.
சூரியமூர்த்தி, விசாலாட்சி தம்பதியரின் 3 பிள்ளைகளில் 2ஆவதாகப் பிறந்த அம்மா, பள்ளிச் சென்று கல்வி கற்றதில்லை. அண்ணன் மாணிக்கமும் தங்கை நவமணியும் பள்ளிக்குச் சென்றனர்.
செட்டிநாடு, கல்விக்கு புகழ் பெற்ற ஒரு மாவட்டம் எனும் போதிலும் ஏதோ காரணங்களுக்காக பள்ளிக்கூட வாசலை மிதிக்கத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என பிற்காலத்தில் அம்மா எங்களிடம் கூறினார்.
இரண்டாவது உலக போருக்குப் பிறகு காரைக்குடியில் திருமணம் செய்து கொண்ட என் பெற்றோர் 1946ஆம் ஆண்டு வாக்கில் மலேசியாவில் குடியேறினார்கள்.
எச்.எஸ்.பி.சி.(HSBC) பொருளகத்தில் வேலைக்கு அமர்ந்த அப்பாவின் சம்பளம் அந்த காலக்கட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 20 ரிங்கிட் மட்டுமே.
இருந்த போதிலும் அந்த சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் மாதம் முழுவதும் தேவைப்படும் சகல செலவுகளையும் அம்மா கவனித்துக் கொண்டார்.
ஏறத்தாழ 16 ஆண்டுகால இடைவெளியில் 8 பிள்ளைகள் – 5 ஆண்கள், 3 பெண்கள். நான் குடும்பத்தில் 6ஆவது. எனக்குப் பிறகு ஒரு தம்பியும் தங்கையும் பிறந்தார்கள்.
தான் கல்விக் கற்கவில்லை எனும் போதிலும் நாங்கள் 8 பேரும் முறையாகக் கல்விக் கற்று சிறப்பான நிலைகளை அடைய வேண்டும் எனும் அசைக்க முடியாத இலக்கிலிருந்து அம்மா துளியளவும் விலகவில்லை.
சில வேளைகளில் எங்கள் குடும்பம் வறுமையானச் சூழலில் உழன்று கொண்டிருந்த போதிலும் எக்காரணத்தைக் கொண்டும் கல்வி தடைப்படக் கூடாது என்பதில் அம்மா உறுதியாக இருந்தார்.
ஒரு சில சமயங்களில் கொய்யாக்காய்தான் எங்களுடைய பசியைக் தீர்க்கும் ஆகாரமாக இருந்தது. மற்ற பல வேளைகளில் வெங்காயத்துடன் கூடிய வெறும் சோற்றுக் கஞ்சி மட்டுமே.
எது எப்படியாயினும் பசியில்லாமல் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதை அம்மா உறுதி செய்துவிடுவார். எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதற்கான வாய்ப்பே இல்லை.
கடந்த 60ஆம் ஆண்டுகளின் மத்தியில் அப்பாவின் சம்பளம் சற்று உயர்வு கண்டிருந்த வேளையில் வாரம் ஒரு முறை கோழிக் கறி அல்லது ஆட்டிறைச்சி சமையல் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
சார்டின்(Sardine) கறி சமைத்தால் அதிலிருக்கும் அந்த ஒற்றை மீனை ஒரு சிறிய கரண்டியைக் கொண்டு அம்மா 8ஆகப் பதிர்ந்து எங்களுக்குப் பரிமாறுவார். அவருக்கும் அப்பாவுக்கும் வெறும் கறிதான்.
வீட்டில் உணவருந்துவதற்கான மேசை நாற்காலி இல்லாத காலக்கட்டமாதலால் தரையில் எங்களை வட்டமாக அமரச் சொல்லி அம்மா உணவு பரிமாறுவார்.
குடும்பச் சுமையை சமாளிக்க உதவும் பொருட்டு மூத்த சகோதரர் ஐந்தாம் படிவத்திற்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர இயலாமல் பொருளகம் ஒன்றில் வேலைக்கு அமர்ந்தார்.
அந்த காலக்கட்டத்தில் அவருக்கு அடுத்து 7 பேர் பள்ளிச் செல்ல வேண்டிய சூழலில், பகுதி நேரமாக துணி துவைக்கும் வேலை ஒன்றை அம்மா மேற்கொண்டார்.
அதற்காக சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வெள்ளையரின் இல்லத்திற்கு தினமும் அம்மா நடந்தே சென்றார்.
இந்நாட்டில் கால் பதித்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1980ஆம் ஆண்டில் தமிழகம் சென்று தாம் பிறந்த ஊருக்குச் செல்ல அம்மா ஆசைப்பட்டர். குடும்பத்தின் பொருளாதார நிலை சீரடைந்துள்ள நிலையில் பெரிய அண்ணன் அந்த ஆசையை நிறைவேற்றினார்.
எனினும் அந்த காலக்கட்டத்தில் அம்மாவின் பெற்றோர் அங்கு உயிருடன் இல்லை. இதர உறவினர்களை மட்டுமே அம்மாவால் சந்திக்க முடிந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டில் தமது 91ஆவது வயதில் முதிர்ச்சி காரணமாக அம்மா உயிரிழந்தார்.























