இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியிலிருந்து வெளியாகப் போகிறோம் என கடந்த பல மாதங்களாகவே மிரட்டி வந்த ம.இ.கா., ஆகக் கடைசியாக எடுத்துள்ள முடிவு அக்கட்சிக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பெரிய கேள்விக்குறிதான்.
அந்த கூட்டணியை விட்டு தற்போதைக்கு வெளியாக மாட்டோம் என அக்கட்சி அறிவித்துள்ள போதிலும் அம்னோவை இனியும் அது உரசிப்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
“எங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை, எனவே நாங்கள் வெளியாகப் போகிறோம்,” என பல மாதங்களாகவே மிரட்டி வந்த ம.இ.கா.வுக்கும் அம்னோவுக்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சுமூகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால் சற்று சினம் கொண்ட தேசிய முன்னணி தலைவர் அஹ்மட் ஸாஹிட், “வேண்டுமென்றால் கிளம்புங்கள்,” என குறைந்தது இரு தடவை மறைமுகமாக சுட்டிக் காட்டியதானது, “நீங்கள் எங்களுக்கு முக்கியமில்லை,” என்று சொல்வதைப் போல் இருந்தது.
“அப்படி வெளியேறினால் பிற்காலத்தில் மீண்டும் திரும்பி வர முடியாது,” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்ததும் நாம் அறிந்ததே.
நம் நினைவுக்கு எட்டிய வரையில் எந்த காலக்கட்டத்திலும், அம்னோவுக்கு எதிராக ம.இ.கா. இப்படி தைரியமாக குரல் எழுப்பியது இல்லை. இது பாராட்டத்தக்க விஷயம்தான்.
ஆனால் இந்தத் துணிச்சலும், உத்வேகமும், ஆக்கப்பூர்வ முன்னெடுப்பும் நம் சமூகத்திற்கான தேவைகளை தட்டிக் கேட்பதிலும் பெற்றுத் தருவதிலும் இருந்திருந்தால் வெகுசன மக்களின் ஆதரவை அக்கட்சி வீணே இழந்திருக்காது.
கடந்த 2007ஆம் ஆண்டில் எழுந்த ஹிண்ட்ராஃப் பேரணிக்குப் பிறகு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானக் கதை’யாக வலுவிழந்துப் போன ம.இ.கா.வை அம்னோவும் கூட ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.
அதனாலோ என்னவோ “வெளியேறப் போகிறோம், வெளியேறப் போகிறோம்” எனும் அக்கட்சியின் தொடரான மிரட்டல்களை பல அம்னோ தலைவர்கள் ஒரு கேலிக் கூத்தாகவே பார்த்தனர்.
“தேசிய முன்னணியில் தொடர்ந்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என எங்கள் பொதுப் பேரவை முடிவெடுக்கும், மத்திய செயலவை முடிவெடுக்கும், தலைமைத்துவம் முடிவெடுக்கும்,” இப்படியெல்லாம் பேசிப் பேசி காலங்கள் கடந்தன.
இதற்கிடையே எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானில் இணைவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது என்று நம்பப்படுகிறது.
“நாங்கள் எந்த ஒரு விண்ணப்பத்தையும் அனுப்பவில்லை,” என ம.இ.கா. வாதிட்ட போதிலும், கடந்த ஜனவரி மாதத்தில் அப்போதைய பெரிக்கத்தான் தலைவர் முஹிடின் யாசின் செய்த ஒரு அறிவிப்பு எல்லாத் தரப்பினரையும் அதிர்ச்சி கடந்த வியப்பில் ஆழ்த்தியது.
அதாவது, “எங்கள் கூட்டணியில் இணைவதற்கான ம.இ.கா.வின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது,” எனும் அறிவிப்பு, ‘நெருப்பில்லாமல் புகையாது அல்லவா,’ என பலரது புருவங்களை உயர்த்தியது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் பெரிக்காத்தானின் தலைமைச் செயலாளரான பாஸ் கட்சியின் தாக்கியுடின் சுமார் 2 வாரங்களுக்கு முன் ஒரு அதிரடி அறிவிப்பை செய்தார்.
“எங்கள் கூட்டணியில் இணைவதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை வழங்குவதற்காக இன்றிரவு ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனை நான் சந்திக்கிறேன்,” என இம்மாதம் 17ஆம் தேதி அவர் கூறினார்.
ஒரு மூத்த அரசியல் தலைவரான தாக்கியுடின், சந்திப்புறுதி இல்லாமல் விளையாட்டுத்தனமாக வெறுமனே இப்படி ஒரு அறிவிப்பை செய்ய வாய்ப்பில்லை என்பதே பலருடைய வாதமாகும்.
எனினும் அவருடையக் கூற்றுப்படி அந்த சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், “நாங்கள் பாரிசானை விட்டு தற்போதைக்கு வெளியாகப் போவதில்லை,” என ம.இ.கா.வின் துணைத் தலைவர் சரவணன் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
பெரிக்காத்தானில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் இம்முடிவை செய்துள்ளோம் என்றும் அவர் விளக்கமளித்தார். ‘அரசனை நம்பி புருஷனை கைவிட’ அவர்கள் தயாராய் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, ம.இ.கா.வின் குரல் தேசிய முன்னணியில் இனி எடுபடுமா அல்லது முன்பு போல ‘பெட்டிப்பாம்பாக’ அடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்படுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






















