பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு மனநலப் பாதிப்பு இருந்ததாகக் கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

கடந்த ஆண்டு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பெண் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனை, சம்பவம் நடந்த நேரத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்து, குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவித்தது.

நீதிபதி அட்லின் அப்துல் மஜித், அந்த சிறுவனை இன்று முதல் பேராக் மாநிலம், உலு கிந்தா பகுதியில் உள்ள ஹோஸ்பிட்டல் பஹாகியா மருத்துவமனையில், சிலாங்கூர் சுல்தானால் அங்கீகரிக்கப்படும் காலத்திற்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

சிறுவனின் வழக்கறிஞர் கிட்சன் பூங் கூறுகையில், சம்பவம் நடந்த நேரத்தில் தனது கட்சியாளர் மனநிலை சரியில்லாத நிலையில் இருந்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றும், இதன் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 84-ன் கீழ் சட்டரீதியான மனநிலைப் பாதிப்பு (legal insanity) நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், குறிப்பிட்ட நேரம், தேதி மற்றும் சந்தர்ப்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் (மனநலம் குன்றிய நிலையில்) இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 84-ஐ பாதுகாப்புத் தரப்பு வெற்றிகரமாக முன்வைத்தது. மனநிலை பாதிப்பு காரணமாக நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்தது,” என்று வழக்கு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடுமையான மற்றும் தீவிரமான ஸ்கிசோஃப்ரினியா (மனச்சிதைவு நோய்) நோயால் அந்தப் பதின்ம வயதினர் பாதிக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்திய, ஹாஸ்பிட்டல் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையின் ஆலோசகர் தடயவியல் மனநல மருத்துவர் டாக்டர் இயன் லாயிட் அந்தோனியின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக ஃபூங் தெரிவித்தார்

“ஸ்கிசோஃப்ரினியா காரணமாக அவர் தனது சுய உணர்வை இழந்திருந்தார். தன்னை ஒரு கடவுள் என்று அவர் நம்பினார். யாரோ ஒருவர் தன்னிடம் குரல் மூலம் பேசி உத்தரவுகளை வழங்குவதாக அவர் கூறினார். இதனை அரசுத் தரப்பு மறுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

சிறுவன் தற்போது அந்த மனநலக் கோளாறுக்காக சிகிச்சை பெறுவார் என்றும், அவர் குணமடைய காலம் தேவைப்படும் என்றும் பூங் தெரிவித்தார்.

சிறுவனின் செயலால் ஒரு உயிர் இழக்கப்பட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தனக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது வாய்ப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி அவருக்கு நினைவூட்டியதாகவும் அவர் கூறினார்.

வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பு 11 சாட்சிகளையும், பாதுகாப்புத் தரப்பு இரு சாட்சிகளையும் ஆஜர்படுத்தியது. அவர்களில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் ஒருவர்.

நான் குற்றவாளி அல்ல

2025 அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.20 மணி முதல் 9.35 மணி வரையிலான நேரத்தில், பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு தேசிய மேல்நிலைப் பள்ளியின் பெண் மாணவிகள் கழிப்பறையில் தனது பள்ளித் தோழியை கொலை செய்ததாக அந்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பிரிவின்படி மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், அதிகபட்சம் 12 பிரம்படி தண்டனையும் வழங்கப்படலாம்.

எனினும், 2001ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 97(1)-ன் படி, 18 வயதுக்குக் குறைவான எந்த நபருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது.

அதற்கு பதிலாக, பிரிவு 97(2)-ன் கீழ், அந்த நபரை யாங் டி-பெர்துவான் அகோங், சம்பந்தப்பட்ட மாநில ஆட்சியாளர் அல்லது யாங் டி-பெர்துவா நெகிரி அங்கீகரிக்கும் காலத்திற்கு தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்களான ராஜா ஸைஸுல் பரிதா ராஜா ஸஹாருடின், அக்ஹாரி துர்ரானி அசிஸ் மற்றும் அஹ்மத் இக்பால் அஸ்மான் ஆகியோர் ஆஜரானார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால், அவரது அடையாளத்தையும் புகைப்படத்தையும் வெளியிட முடியாது. வழக்கு விசாரணை மூடிய நீதிமன்ற அறையில் நடைபெற்றது.

2026 பிப்ரவரி 12ஆம் தேதி, குற்றச்சாட்டு மீண்டும் அவரிடம் வாசிக்கப்பட்டபோது, அவர் மாண்டரின் மொழியில் குற்றமற்றவர் என மனு தாக்கல் செய்தார்.