சிரியாவில் அனைத்துலக அமைதிப் படை: அரபு லீக் முடிவு; ரஷ்யா எதிர்ப்பு

சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அந்நாட்டு தலைவர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் இராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா.-அரபு லீக் இணைந்த, அனைத்துலக அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது. சிரியாவில், கடந்த 11 மாதங்களாக, தலைவர் அசாத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, இராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை 5,000 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரபு லீக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஐ.நா-வின் பாதுகாப்பு மன்றத்தில் மற்றும் அரபு லீக் இணைந்து, அனைத்துலக அமைதிப் படை ஒன்றை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் மற்றும் இராணுவத் தளபாடங்கள் ரீதியாக உதவி செய்யத் தயார் எனவும், முடிவு எடுக்கப்பட்டது.

சிரியாவின் பிரதிநிதி இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை நிராகரிப்பதாக, அந்நாடு தெரிவித்துள்ளது. அரபு லீக்கின் இந்த முடிவை, ரஷ்யா மீண்டும் எதிர்த்துள்ளது. இது குறித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லேவ்ரோவ் அளித்த பேட்டியில், “அனைத்துலக அமைதிப் படை சிரியாவுக்குள் நுழைவதற்கு முன், அங்கு இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஆனால், அங்கு அரசை எதிர்த்து வரும் ஆயுதக் குழு, யார் கட்டுப்பாட்டிலும் இல்லை” என தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சர் லியு வெய்மின், நேற்று இது குறித்துக் கூறுகையில்; “அரபு லீக்கின் இந்த முடிவு, சிரியா விவகாரத்தில் சாதகமான சூழலைத் தோற்றுவிக்க வேண்டும்” என்று மட்டும் தெரிவித்தார்.

அரபு லீக்கின் திட்டத்திற்கு, சீனா ஆதரவா, எதிர்ப்பா என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், ஹோம்ஸ் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில், நேற்று சிரியா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியாவைப் போல, சிரியாவிலும் நேட்டோ படைகளை அனுப்பி, அமைதியைக் கொண்டு வருவதில் பல்வேறு அரசியல் ரீதியிலான சிக்கல்கள் இருப்பதால் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் அதில் தயக்கம் காட்டி வருகின்றன.