பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?

ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார்.

பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.

அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என அவை கூறின. அவர் முன்பு புலாவ் திக்குஸ் தொகுதிக்கான உறுப்பினராக இருந்தார்.

புது முகங்களான வழக்குரைஞர்கள் ரோவெனா யாம், பல்ஜித் சிங், கீதா சுரேஷ் சாந்த ஆகியோர் அந்தத் தொகுதிக்கு வேட்பாளர்களாக இருக்கலாம் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2010ம் ஆண்டும் நடந்த அவசரப் பொதுக் கூட்டம் ஒன்றில் தெங் தலைமைத்துவம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போது தெங்-கின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்பட்டது.

அவர் பினாங்கு பிஎன் தலைவராக கோ-விடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு பிஎன் தலைவர் என்ற முறையில் நஜிப்-பின் அங்கீகாரத்துக்காக  இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது.

பினாங்கில் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 13 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் (2008ம் ஆண்டைப் போன்று) கெரக்கான் போட்டியிடும் என அந்த வட்டாரங்கள் கூறின.

கோ-விடம் சமர்பிக்கப்பட்டுள்ள 30 பெயர்களில் 18 பேர் புதியவர்கள். மற்றவர்கள் பழையவர்கள். அந்தத் தொகுதிகளில் இரண்டுக்கு ஐவருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

தெங்-கின் எதிரி மீட்சி பெறுவாரா?

2008ம் ஆண்டு தேர்தலில் தோல்வி கண்ட பின்னர் அரசியல் களத்தில் அமைதியாக இருந்து வரும் முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் சியா குவாங் சாய், தஞ்சோங் பூங்கா தொகுதியில் நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. சியா பினாங்கில் தெங்-கின் பரம எதிரி ஆவார். முன்னாள் கெரக்கான் தலைமைச் செயலாளருமான அவர் புக்கிட் பெண்டேரா தொகுதிக்கான முன்னாள் எம்பி -யும் ஆவார்.

நடப்புத் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் பாடாங் கோத்தா தொகுதியில் அல்லது மாச்சாங் பூபோக் தொகுதியில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே பட்டியல் கோ-விடம் சமர்பிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த சாங் இயூ அதன் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

“நான் ஊகங்களை உருவாக்கவோ கட்சித் தலைவர்களுக்கு இடையில் பிணக்கை ஏற்படுத்தவோ நான் விரும்பவில்லை,” என அவர் விளக்கினார்.