சிரியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் 130 பேர் பலி

சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் எறிகணை குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது.

ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் காணொளி ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது.

ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டதாகத் தெரியும் ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறைந்தபட்சம் பதிமூன்று பேரின் சடலங்களை உறுதிசெய்யப்படாத இந்த காணொளி காட்டுகிறது.