மனித உரிமை ஆணையாளர் முகமட் ஷானி அப்துல்லா எதிர்பாராத வகையில் அரசியல்வாதியாக மாறி, தங்களது வாக்குகள் ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதாரப் பாதிப்பு பற்றி பல புகார்தாரர்களுக்கு நினைவுபடுத்தினார்.
கோலாலம்பூரில் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத் தலைமையகத்தில் நேற்று மூன்று குழுக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக் கொண்ட போது அவர் பேசினார்.
அத்தகைய பிரச்னைகள் மக்கள் குறிப்பிட்ட கட்சிகளை மீண்டும் மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதால் ஏற்படுவதாக அவர் சொன்னார்.
“வாழ்வாதாரத்தை இழப்பது, நில அபகரிப்பு, கைவிடப்பட்ட திட்டங்கள் போன்ற பிரச்னைகள் ஒராங் அஸ்லிக்களையும் (தீவகற்ப மலேசியா) சபா, சரவாக்கில் பலரையும் பாதித்துள்ளன,” என்றார் அவர்.
“வாக்களிக்கும் சுதந்திரம் உங்களுடைய உரிமை. குறிப்பிட்ட ஒரு கட்சியை பற்றி பெருமிதம் கொண்டு அதன் வேட்பாளர்களை மீண்டும் மீண்டும் தேர்வு செய்யும் போது உங்கள் நலன்களை தவறாகப் பயன்படுத்தக் கூடிய, அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை நீங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்.”
ஜோகூர் பெங்கெராங்கில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், நில அபகரிப்பினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் நெகிரி செம்பிலான், கம்போங் செராம்பாங் இண்டாவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், வீடமைப்பு திட்டங்கள் கைவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஜோகூர், தோமோய் வட்டார மக்கள் ஆகியோரின் புகார்கள் சுஹாக்காமிடம் சமர்பிக்கப்பட்டன.
அந்த மூன்று குழுக்களின் 40 பேராளர்கள் சுஹாக்காம் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றனர். அவர்களை பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் மஸ்லான் அலிமான் ஒருங்கிணைத்தார்.
தங்கள் குறைகளை ஐநா-வுக்குக் கொண்டு செல்ல மனித உரிமை ஆணையம் உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
“நாடாளுமன்றம் வெறும் ரப்பர் முத்திரை”
அவர்களுடைய பிரச்னைகளை ஐநா-வுக்குக் கொண்டு செல்வதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் முகமட் ஷானி தெரிவித்தார். காரணம் அவர்களுடைய புகார்கள் சம்பந்தப்பட்ட பல அனைத்துலக ஒப்பந்தங்களை மலேசியா அங்கீகரிக்கவில்லை என்றார் அவர்.
மலேசியாவில் ஆளுமை முறை தோல்வி கண்டு விட்டதாக அவர் அடுத்துக் கூறினார்.
“இங்கு அரசியல் களத்தில் இரு பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அம்னோ உறுப்பினர்கள், பாஸ் உறுப்பினர்கள், மஇகா, மசீச, கெஅடிலான் உறுப்பினர்கள் ஆகியோரும் உள்ளனர். நாம் வெவ்வேறு விதமாக வாக்களிக்கலாம். ஆனால் உரிமைகள் இழக்கப்படுவது, பறிக்கப்படுவது போன்ற பிரச்னைகளில் நாம் ஒன்றுபடுகிறோம்,” என்றும் முகமட் ஷானி குறிப்பிட்டார்.
‘மற்ற நாடுகளில் அனைத்துலக ஒப்பந்தங்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வேளையில் இந்த நாட்டில் ரப்பர் முத்திரையாகத் திகழும் நாடாளுமன்றத்திடமிருந்து எந்தக் கருத்தையும் நாடாமல் அந்த விவகாரங்களை அமைச்சரவை முடிவு செய்கிறது.”
“இங்கு எப்போதும் தலைகீழாகவே இருக்கிறது. மக்கள் குரல் மேல் மட்டத்துக்குச் செல்வதே இல்லை.”
புகார்தாரர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் செல்ல தாம் விரும்புவதாகவும் ஆனால் அதனை முதலில் ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் முகமட் ஷானி குறிப்பிட்டார்.
அவர் மனித உரிமை ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு பயனீட்டாளர் இயக்கத்தில் இருந்த போது மிகவும் வெளிப்படையாக பேசி வந்துள்ளார்.
அவர் ஏற்கனவே தேசிய பயனீட்டாளர் புகார் மய்ய தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மலேசியப் பயனீட்டாளர் சங்க சம்மேளனத் தலைமைச் செயலாளராகவும் பாகாங் பயனீட்டாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.