பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியதில் 127 பேர் பரிதாபமாக பலி

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், 127 பயணிகள் பலியாயினர். பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி போயிங் 737 விமானம், 127 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. போஜா ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானம், மோசமான வானிலை காரணமாக சக்லலா விமானப்படை தளம் அருகே ஹுசைன் அபாத் கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. தீப்பிடித்தது நொறுங்கிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது.

விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பலியாயினர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்ததும் விமானம் விபத்துக்குள்ளான விஷயம் தெரியவரும்.

இஸ்லாமாபாத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலைக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நிகழ்ந்த முக்கிய விமான விபத்துகள்:

1989 ஆக., 25: வடக்கு பாகிஸ்தானின் கில்ஜிட் என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் 54 பேர் பலி.

2006 ஜூலை 10: பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து லாகூருக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி.

2010 ஜூலை 28: கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்ட “ஏர்புளு ஏர்பஸ் 321′ என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 149 பேர் பலி.