லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை; கர்ணல் கடாபி

லிபிய குடியரசுத் தலைவர் கர்ணல் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் தலைநகரம் திலிபோலியை அண்மையில் கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

கடாபியின் சொந்த ஊர் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்குதான் கடாபி பதுங்கி இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு லிபியாவின் அண்மை நாடான நைஜருக்கு லிபியாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் நள்ளிரவில் அணிவகுத்து சென்றுள்ளன.

இந்த வாகன அணிவகுப்பில் கடாபியும் அவரது மகனும் நைஜீரியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை நைஜீரியா நாட்டு வெளியுறவு மந்திரி முகமது பசும் மறுத்தார்.

“கடாபியோ அல்லது அவரது மகனோ எங்கள் நாட்டுக்குள் வரவில்லை. ஆனால் அதிகாரிகளும், அகதிகளும் வந்துள்ளனர்” என்று கூறினார்.

நைஜீரியா வெளியுறவு மந்திரி தவறான தகவலை தெரிவிப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடாபியே தான் நைஜீரியா நாட்டுக்கு தப்பிச்செல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.

சிரியா நாட்டு தொலைக்காட்சி நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடாபி; “நான் இப்போதும் லிபியாவில்தான் இருக்கிறேன். எந்த நாட்டுக்கும் தப்பி ஓடும் எண்ணம் இல்லை. நான் தற்போது பின்வாங்கி இருப்பது போர் தந்திரமாகும். நாங்கள் புரட்சிப்படை மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டுப் படையையும் தோற்கடிப்போம். லிபியாவை யாரும் கைப்பற்ற முடியாது” என்றார்.