தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் துப்பாக்கியால் மிரட்டிய ஜோர்டான் எம்.பி.

ஜோர்டான் நாட்டில் உள்ள ஜோ சாட் என்ற தனியார் தொலைக்காட்சி சானல், சிரியா விவகாரம் பற்றி ஒரு நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில், முகமது ஷாவப்கா என்ற எம்.பி.யும், மன்சூர் சய்ப் அல்-தி முராட் என்ற அரசியல் பிரமுகரும் பங்கேற்றனர்.

சிரியா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. திடீரென தனிப்பட்ட முறையில் வசைபாடத் தொடங்கி விட்டனர். எம்.பி.யை பார்த்து, `நீ இத்தாலி உளவுப்படையின் ஏஜெண்டு’ என்று முராத் கூறினார். உடனே சூடான எம்.பி., `நீ ஒரு ரவுடி’ என்று கூறியபடி, தனது ஷுவை கழற்றி முராத் மீது எறிந்தார்.

இதனால் அவமானம் அடைந்த முராத், தனக்கு முன்பிருந்த மேஜையை தள்ளிவிட்டு, எம்.பி.யை நோக்கி முன்னேறினார். அந்த கட்டத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக எம்.பி. தனது `கோட்’ பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து முராத்தை நோக்கி குறி வைத்தார்.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த முகமது ஹபாஷ்நேவுக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவர் இருவரையும் சமாதானப்படுத்த பெரிதும் போராடினார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சானல் நிர்வாகம், வேறு நிகழ்ச்சிக்கு தாவிவிட்டது.