லிங்: நான் டாக்டர் மகாதீரை ஏமாற்றத் துணிய மாட்டேன்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது அமைச்சரவையை ஏமாற்றியதாக தமக்கு எதிராக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

தமது வழக்குரைஞர் விசாரணை செய்த போது லிங் அவ்வாறு சொன்னார்.

தொழில் ரீதியில் மருத்துவரான லிங், கேள்விகள் கேட்குமாறு விசாரணை நீதிபதி அஹ்மாடி  அஸ்னாவியையும் கேட்டுக் கொண்டார்.

 

“என் மீது தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேள்விகளை கேட்குமாறு விசாரணை நீதிபதியை நான் அழைக்கிறேன்,” என்றார் லிங்.

நீதிபதி அஹ்மாடி அளித்த பதில்: “டிபிபி கேள்விகளைத் தொடுப்பார்.”

வழக்குரைஞர் வோங் கியான் கியோங் நடத்திய இன்றைய விசாரணை முழுவதிலும், லிங்,  அமைச்சரவையையோ பிரதமரையோ அரசாங்கத்தையோ ஏமாற்ற விரும்பும் நோக்கம்  தமக்கு இருந்ததாக கூறப்படுவதை மறுத்தார்.

வோங்-கின் ஒரு கேள்விக்குப் பதில் அளித்த அவர்,” நான் பிரதமரை ஏமாற்றுவதற்குத் துணிய மாட்டேன்,” என்றார்.