முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு சவுதி எச்சரிக்கை

ரியாத்: ரம்ஜான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.

ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர்.

இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என எச்சரித்துள்ளது.