சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ : சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர்  இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது.

இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை  சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பிறகு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்காவிற்கு எதிராக கூறியதாவது,

“ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும்.

சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரி ஜமிளுடன் பேசியுள்ளேன். உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார்.” இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

இதனிடையே, அந்நாட்டின் துணைப் பிரதமர்,  அதிபர் ஆசாத் பதவி விலகுவது குறித்து பேசி வருகிறோம். ஆனால் அது பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்கும் என்று கூறியுள்ளார். உச்சக்கட்ட சண்டை நடந்து வரும் அங்கு சிரியாத் துருப்புகள் டமஸ்கசின் மேற்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் போராளிகள் 23 பேரை கொன்றுவிட்டதாக சொல்லுகிறது. அதே சமயம் போராளிப் படைகள் அலெப்போ நகரின் 60 சதவிகிதப் பகுதியும் எல்லைப் பகுதியில் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்று அது கூறியுள்ளது.

ரஷியாவும் சீனாவும் சிரியாவுக்கு ஆதராவாக பேசி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருப்பது இப்பிராந்தியத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.