நோர்வே: 77 பேரைக் கொன்றவருக்கு 21 ஆண்டுகள் சிறை

நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நோர்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.

பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், உயர் பாதுகாப்பு கொண்டு மன நல சிறைப் பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டிருப்பார்.

துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் தாக்குதலை நடத்தியதை ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொண்ட பிரெய்விக் அந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கவில்லை. தனது மன நலம் குறித்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் உறவினர்களும், நண்பர்களும் தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

குடியேரிகளுக்கு எதிராக பிரெய்விக் எழுதிய விடயங்கள் குறித்த கூடுதலான தகவல்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.