பிரபாகரன் என்ன சொன்னார்? : பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை இராணுவத்திடம் சரணடையும் முன்னர், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பல அனைத்துலக பிரமுகர்களைத் தொடர்புகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக லண்டனில் வசித்த மரியா கெல்வின் என்னும் ஊடகவியலாளரையும் அவர்கள் தொடர்புகொண்டு தாம் சரணடைய இருப்பதைத் தெரிவித்தனர்.

இச் செய்திகள் ஐ.நா அதிகாரி நம்பியாருக்கும், மற்றும் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பரிமாறப்பட்டது. சரணடைவதற்கு முன்னதாக அவர்கள், சில கடிதங்களை முள்ளிவாய்க்காலுக்கு வெளியே அனுப்பியுள்ளனர்.

இவை மக்களோடு மக்களாகச் செல்லவிருந்த புலிகள் உறுப்பினர் ஊடாகவும் மற்றும், சட்டலைட் தொலை நகல் ஊடாகவும் அனுப்பப்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியே சென்ற அவரது கடிதம் ஒன்றை தமிழ் ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ளது.

அக்கடிதமானது சுடர் என்னும் போராளிக்கு எழுதப்பட்டுள்ளது. இக் கடிதத்தை முள்ளிவாய்காலில் இருந்து கொண்டுசென்று, சுடரிக் கைகளில் கொடுக்க ஒரு நபரை ஏற்பாடு செய்துள்ளார், பா.நடேசன்.

காஸ்ரோ என்பவர், எற்கனவே சுடர் என்னும் போராளிக்கு சில விடையங்களைத் தெரிவித்துள்ளதாகவும் தேசிய தலைவர் குறிப்பிட்டது போல அனைத்தையும் வெளியில் இருந்து செயல்படுத்துமாறும் அக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் எதனைச் செய்யச் சொல்லி உள்ளார் என்பது தொடர்பாக இக்கடிதத்தில் எழுதப்படவில்லை. மேலும் செய்மதி தொலைபேசியில் எதனையும் பேசமுடியாது என்று பா.நடேசன் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவை ஒட்டுக்கேட்க்கப்படுகிறது என்ற விடையமும் இதனூடாக நன்றாகப் புலப்படுகிறது. அத்தோடு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இங்கு எல்லாம் நிறைவடைந்து விட்டதாகவும் அவர் அக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்தியா சென்று முடிந்தால் வைகோவைப் பார்க்குமாறும், அவர் சுடருக்கு அறிவுறுத்தியுள்ளார். இக் கடிதத்தை கொண்டுவரும் நபர் (பெயர் வெளியிடவில்லை) மேலும் சில விடயங்களை உங்களுக்குத் தெரிவிப்பார் என்றும் பா.நடேசன்  இக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தேசியத் தலைவர் பா.நடேசனிடம் எதனைச் சொன்னார், அவர்கள் இருவரும் இணைந்து எதனைச் செயல்படுத்தச் சொன்னார்கள் என்பது போன்ற விசயங்களே இன்னும் இலைமறை காயைப்போல உள்ளது. இவையும் வெகுவிரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.

TAGS: