குரான் எரிப்பு வழக்கு : பாகிஸ்தான் சிறுமி விடுதலை

பாகிஸ்தானில் குரானின் சில பக்கங்களை எரித்ததாக, ரிம்ஷா என்ற 14 வயது கிறிஸ்த்துவ சிறுமி மீது சுமத்தப்பட்டிருந்த மத நிந்தனை வழக்கை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண் அப்பாவி என்றும், இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் என்றும் அவரது வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு முஸ்லிம் மதகுரு கொண்டுவந்த குற்றச்சாட்டை அடுத்து ரிம்ஷா கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது போலி சாட்சியங்களை தயார் செய்தார் என்கிற வழக்கு அந்த மதகுரு மீது கொண்டுவரப்படுகிறது.

ஒரு அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் ரிம்ஷா தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து உலகெங்கிலிருந்தும் கவலைகள் எழுந்தன. அவரது குடும்பத்தாருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தலைமறைவானார்கள்.