இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது : விக்கிரமபாகு

wikiramapakuஇலங்கையில் சுதந்திரம் என்பது கிடையாது, இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; வடக்கில் இருந்து காணாமல்போன உறவுகளைத் தேடி வந்த அவர்களது உறவினர்களை ஏன் இராணுவத்தைக் கொண்டு தடுத்தனர். இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அவர்கள் தென்பகுதிக்கு வந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஜனநாயக நாட்டில் சுதந்திரம் இல்லையா?

இந்நிலையில், போர் முடிந்து நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதானம், ஐக்கியம், நிலவுகின்றது என ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பெரிதாக சொல்லிக் கொண்டு திரிகின்றது. இங்கு சுதந்திரம் எங்கு உள்ளது? நாட்டில் ஜனநாயக ஆட்சியென்பது நடைபெறவில்லை மாறாக இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது.

இதேவேளை, நாட்டில் குத்தாட்டும் போடும் அரசாங்கமும் அதிலுள்ளவர்களும் அபிவிருத்தி என்ற போர்வையில் தமது சட்டைப் பைகளை நிறப்புகிறார்கள் என அவர் மேலும் சொன்னார்.

TAGS: