அரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு

TNA-sampanthanஇலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்ததை இந்தியக் குழுவினர் தம்மிடம் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

அந்த சட்டத் திருத்தம் ஏன் அர்த்தமற்றது என்று தமது தரப்பில் இந்தியக் குழுவினருக்கு எடுத்துக் கூறப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைபடுத்துவதற்கு இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கூட்டமைப்பு அவர்களிடம் கூறியதாகவும் சுமந்திரன் கூறினார்.

பேச்சு வார்த்தைகள் தொடருமா ?

அரசியல் தீர்வு குறித்து அரச தரப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு தாங்கள் பதில் கூறியதாகவும், இந்தியக் குழுவினர் அதை முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் அடுத்த என்ன நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக இந்தியக் குழுவினர் ஏதும் சொல்லவில்லை எனவும் கூறும் அவர், தமிழகத்தில் தற்போதுள்ள உணர்வுகளை அவர்கள் நன்கு மதிக்கிறார்கள் எனவும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதற்கு அரச தரப்பில் கூறப்பட்ட காரணங்களையும் இந்தியக் குழுவினர் தங்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அது குறித்து தமது தரப்பின் விளக்கங்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

-BBC

TAGS: